Close
மே 20, 2024 6:27 மணி

புத்தகம் அறிவோம்… 50 எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- 50 எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள்

நாளை காலை துவங்க இருக்கும் போரில், அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டால், முன்பாகவே துவங்கப்பட வேண்டிய போரில் தொய்வோ, புறக்கணிப்போ இருக்கலாகாது என்பது என் விருப்பம். என்னுடன் சேர்ந்த அணியினரும் கைதான உடனே, பத்து அணிகள் தயாராக உள்ளன என்னும் செய்தியைக் கேட்க நான் ஆவலுடன் காத்திருப்பேன்.

இன்று நான் துவக்கியிருக்கும் பணியை முடிக்க இந்தியாவில் மக்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.எனக்கு, நமது நோக்கத்தின் அறவழியிலும் நாம் தாங்கும் ஆயுதங்களின் தூய்மையிலும் நம்பிக்கை இருக்கிறது. எங்கு வழிமுறைகள் தூயனவாக உள்ளனவோ, சந்தேகத்திற்கு இடமின்றி, அங்கு கடவுள் தம் ஆசிகளுடன் இருக்கிறார்.

ஒர் அறவழிப் போராளி, சிறையில் இருந்தாலும் அவருக்கு என்றும் வெற்றிதான்.அவர், எப்பொழுது உண்மையையும் அறவழியையும் கைவிட்டு அக்குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறாரோ அப்பொழுதுதான் அவருக்கு தோல்வி. ஒரு அறவழிப்போராளிக்குக் கூட, தோல்வி என்பது ஒன்று இருக்குமானால் அதற்கு அவரே தான் காரணம்.

கடவுள் உங்கள் அனைவருக்கும் அருள்புரியட்டும். நாளை துவங்க இருக்கும் போராட்டத்தின் பாதையில் இருக்கும் தடைகளை எல்லாம் அகற்றட்டும். இதுவே நம் பிரார்த்த னையாக இருக்கட்டும்.(பக்.276 – 277).மார்ச் 11, 1930 தண்டி யாத்திரைக்கு முன்பு அகமதாபாத்தில் காந்தி ஆற்றிய உரையின் இறுதிப் பகுதி.

நான் அறிந்த முதல் சொற்பொழிவு அலெக்ஸாண்டர் தன் படைவீரர்களிடம் ஆற்றிய உரை. தன் சொந்த நாட்டிலிருந்து புறப்பட்டு நீண்டகாலம் ஆனதால், சோர்ந்துபோய் தொடர்ந்து போரிட விரும்பாத வீரர்களிடம் அலெக்ஸாண்டர் ஆற்றிய உரை. அது அவரை இந்தியாவை வெற்றிகொள்ளச்செய்தது.
அது போல எண்ணற்ற சொற்பொழிவுகள் உலகில் நிகழ்த் தப்பட்டிருக்கின்றன. பல வரலாற்றின் போக்கையே மாற்றி இருக்கின்றன.

‘மக்களுடைய மக்களாலான , மக்களுக்கான அரசு என்பது இந்தப் பூமியிலிருந்து அழிந்து விடாது’ என்ற லிங்கனின் கெட்டில்பர்க் உரையின் கடைசி வரிகள், ஜனநாயகத்தின் ஆணிவேராகப் பார்க்கப்படுகிறது.

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை, ‘என்ற திலகரின் உரை.
‘விதியுடன் சந்திப்பு’ என்ற நேருவின் உரை,’வெள்ளையனே வெளியேறு’ காந்தியின் உரை – காலத்தால் அழியாதது.Finger print வெளியிட்டுள்ள இந்த நூலில் 50 சொற்பொழிவுகள் இடம்பெற்றுள்ளளன.

இந்திய அளவில் திலகரின் ஒரு சொற்பொழிவு,
நேருவின் உரை – 1, காந்தியின் உரை 2 இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்நூலில் உள்ளநெல்சன் மண்டேலா,அடால்ப் ஹிட்லர்,ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்,
ஜான் எஃப் கென்னடி ,மகளிருக்கு வாக்குரிமை கேட்ட மார்க் ட்வைன்,வி.ஐ.லெனின்,வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரின் உரைகள் வாசிக்கபட வேண்டியவை.

இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு உரையுடனும், அந்த உரை நிகழ்ந்த காலகட்டத்து நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகமும், உரையைக் கேட்ட மக்களைப் பற்றிய குறிப்பும், உரை ஏற்படுத்திய தாக்கமும் தந்திருப்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

இந்நூலில் உள்ள ஒவ்வோர் உரையும் எழுச்சி ஊட்டுவதுபோல, அறிவு வெளிச்சத்தையும், நுட்பமான கருத்துகளையும் வழங்குகிறது.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top