Close
ஏப்ரல் 23, 2026 9:57 மணி

கேரளாவில் 3 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் பதவியேற்பு!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கொச்சி, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்: கொச்சி மாநகராட்சி: வி.கே. மினிமோல் மேயராகப் பதவியேற்றார். கண்ணூர் மாநகராட்சி: பி. இந்திரா மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்சூர் மாநகராட்சி மேயராக டாக்டர் நிஜி ஜஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற மூன்று மாநகராட்சிகளில் ஆண்கள் மேயர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

திருவனந்தபுரத்தில் பா.ஜ அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அக்கட்சியின் வி.வி. ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புக்குப் பின் பேசிய வி.வி. ராஜேஷ், “அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். திருவனந்தபுரத்தின் அனைத்து வார்டுகளிலும் சமமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் முன்னணி நகரங்களில் ஒன்றாக இது மாற்றப்படும்,” என்று தெரிவித்தார்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தியா பினு புல்லிக்கண்டம் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார். இவர் இந்த நகராட்சியின் மிக இளம் வயது தலைவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மொத்தம் 26 உறுப்பினர்களைக் கொண்ட இந்த நகராட்சியில், தியாவுக்கு ஆதரவாக 14 வாக்குகள் கிடைத்தன. காங். தலைமையிலான முன்னணி இவருக்கு ஆதரவளித்தது.

திருச்சூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சர்ச்சை வெடித்தது. காங்கிரஸ் கவுன்சிலர் லாலி ஜேம்ஸ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேயர் பதவியை டாக்டர் நிஜி ஜஸ்டினுக்கு “விற்பனை” செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கேரள அரசியலில் பெண்களின் பங்களிப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், திருவனந்தபுரத்தில் பாஜவின் வெற்றியும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top