இந்தியாவில் ஆறுகளையும், நீர் நிலைகளையும் நாம் தெய்வமாக வழிப்பட்டாலும், நமது வீடுகளில் குழாய்கள் வழியே வரும் தண்ணீரை நேரடியாகக் குடிப்பதற்குப் பயன்படுத்துவது மிக மிக அரிது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை நன்கு காய்ச்சிய பின்பே குடிக்கிறோம் அல்லது வாட்டர் ஃபில்டர்கள், ஆர்.ஓ சிஸ்டம்களைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்காக மாறியிருக்கிறது ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகக் கடற்கரை நகரமான பூரி. இன்று பூரி நகரில் எந்தவொரு அச்சமும் இன்றி, மக்கள் தங்கள் வீட்டு குழாய்களில் இருந்தே நேரடியாகத் தண்ணீரைப் பிடித்துக் குடிக்கிறார்கள். இந்த அசாத்தியமான மாபெரும் மாற்றத்தைக் கண்டு வியந்து, முன்னணி இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் மனதாரப் பாராட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நாட்டின் நல்ல முன்னெடுப்புகளையும், புதுமையான முயற்சிகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் ஆனந்த் மஹிந்திரா, பூரி நகரின் குடிநீர் கட்டமைப்பு குறித்த வீடியோ ஒன்றை அண்மையில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது: நமது நாட்டில் ஆறுகளை நாம் வழிபடுகிறோம், ஆனால் வீடுகளுக்கு வரும் தண்ணீரை நாம் அரிதாகவே நம்புகிறோம். இதனால்தான் பூரி நகரின் இந்த மாற்றம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு ஒட்டுமொத்த நகரமே குழாயிலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கும் நிலையை எட்டியுள்ளது. அரசியல் தலைமை, நிர்வாகத் திறன் மற்றும் மக்களின் கூட்டுப் பங்களிப்பு ஆகியவை ஒன்றாக இணைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு பூரி நகரமே மிகச்சிறந்த உதாரணம்.”
மேலும், அரசாங்கம் நினைத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உண்மையிலேயே உயர்த்த முடியும் என்பதை நிரூபித்த தலைவர்களுக்கும், விழிப்புணர்வுள்ள பொதுமக்களுக்கும் இதனைப் பகிர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இன்று நாம் பார்க்கும் இந்த வசதி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பூரி நகருக்கு ஒரு எட்டாக்கனியாகத்தான் இருந்தது. இந்தியாவின் பிற நகரங்களைப் போலவே பூரியும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டையும், சுகாதாரச் சீர்கேட்டையும் சந்தித்து வந்தது.
நகரில் இருந்த மொத்த குடும்பங்களில் வெறும் 50% வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மற்றவர்கள் தண்ணீர் லாரிகளையும், கேன் தண்ணீரையுமே நம்பியிருந்தனர்.
சேதமடைந்த பழைய குழாய்கள் மற்றும் கசிவுகள் காரணமாக விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் கிட்டத்தட்ட 47% வீணாகிப் போனது.
சீரற்ற குடிநீர் விநியோகம் மற்றும் குழாய்களில் ஏற்படும் அசுத்தங்களால் தண்ணீரின் தரம் கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த அவலநிலையை மாற்றியமைக்க ஒடிசா அரசு ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்தது. பார்கவி ஆற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் அதிநவீன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு, பின்பு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
தற்போது பூரி நகரில் உள்ள சுமார் 2.5 லட்சம் குடியிருப்புகளுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் உயர்தர சான்றிதழ் பெற்ற குடிநீர் நேரடியாக விநியோகிக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘ஸ்மார்ட் வாட்டர் சிஸ்டம்’ இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார்கள் மூலம் தண்ணீரின் ஓட்டம், அழுத்தம் மற்றும் குளோரின் அளவு ஆகியவை சீரான இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
முன்பு 47% ஆக இருந்த தண்ணீர் வீணாகுதல் அளவு, இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது வெறும் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் அரசாங்கத்தின் முயற்சி ஒருபுறம் இருந்தாலும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் இதில் மிகக் கடினமான காரியமாக இருந்தது. குழாயிலிருந்து வரும் தண்ணீரை நேரடியாகக் குடிக்கலாம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க ‘ஜல் சதி’ எனப்படும் உள்ளூர் பெண்கள் குழுக்கள் களமிறக்கப்பட்டன.
இந்த அர்ப்பணிப்புமிக்க பெண்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று தண்ணீரின் தரத்தைப் பரிசோதித்துக் காட்டினர்; விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்களது அயராத உழைப்பே இன்று ஒட்டுமொத்த நகரமும் இந்தத் திட்டத்தை முழுமையாக நம்பக் காரணியாக அமைந்துள்ளது. இவர்களை ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் ‘நகரத்தின் குடிநீர் காவலர்கள்’ என்று தனித்துவமாகப் பாராட்டியுள்ளார்.
பூரி நகரின் இந்த குடிநீர் புரட்சி, பொதுமக்களின் தாகத்தைத் தீர்த்ததோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய நன்மையைத் தந்துள்ளது.
பூரி நகருக்கு ஆண்டுதோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களும் இப்போது தூய்மையான குடிநீரை நகரின் பல்வேறு இடங்களில் நேரடியாகப் பெற்றுப் பயனடைகின்றனர். மக்கள் கேன் தண்ணீரையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வாங்குவது பெருமளவில் குறைந்துள்ளதால், அந்நகரத்தில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 400 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.
வறட்சியும், குடிநீர் மாசடைதலும் இந்திய நகரங்களின் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் இந்த வேளையில், ஒடிசாவின் ‘பூரி மாடல்’ நாட்டின் பிற மாநிலங்களுக்கும், நகரங்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது


