திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 58 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை சிற்றுண்டி உணவு உட்கொண்டும் பொழுது 11 மாணவர்களுக்கு சில நிமிடத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உணவை பரிசோதனை செய்து பார்த்ததில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவை எடுத்து வெளியில் வீசிவிட்டு, பின்னர் மயக்கம் அடைந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும் மருத்துவர்களிடம் குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவை தீவிர கண்காணிப்போடு பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.




