Close
மே 20, 2024 8:32 மணி

கவிதைப்பக்கம்… அனுபவம்.. மருத்துவர் மு. பெரியசாமி..

புதுக்கோட்டை

கவிதை... மருத்துவர் மு. பெரியசாமி

அனுபவம்…

நிம்மதி என்பது
வாங்குவதல்ல
வாய்ப்பது
அதற்கு
நிதானமும்
நேர்மையும் வேண்டும்

கலக்கம் என்பது
கடலுக்கும் உண்டு
தெளிவும்
அன்பும்
அலைகளாக மாறும்போது
அவை
அழகாகிவிடும்
ஆபத்து நீங்கிவிடும்

முயற்சியே
வெற்றியின் படிக்கட்டு
திறமையும்
தன்னம்பிக்கையும்
அதை
நீடிக்கவைத்து
நிரந்தரமாக்குகிறது

நட்பும்
உறவும்
நாள்தோறும்
நாம் படிக்கும் புத்தகங்கள்
சிலர் கற்றுக்கொள்கிறார்கள்
சிலர்
கற்றுக்கொடுக்கிறார்கள்
சிலர்
காலமெல்லாம் சிறக்கிறார்கள்

தேன்
கொடுப்பவனின் உழைப்பு
எடுப்பவனுக்கு இனிப்பு
இரண்டிற்கும்
முயற்சியும் தேவை
பயிற்சியும் தேவை
தூய்மையும்
துணிச்சலும் இருந்தால்
வாய்மையும்
நேர்மையும்
வாழ்வாக மாறும்

அனுபவம் என்பது
பாடங்கள் நடத்தாமலே
பரீட்சைகள்
நடக்கும் பள்ளிக்கூடம்
வெற்றியும் தோல்வியும்
அங்கே
பதிவிறக்கம் செய்யப்பட்டு
பாடப்புத்தகங்களாகிறது
படித்தால்
பயன்பெறலாம்

காலம்
ஒன்றுதான்
நமக்கு
காட்சியையும் தருகிறது
சாட்சியாகவும் வருகிறது
அதை
பொன்போல் போற்றி
கண்போல் காக்கவேண்டும்

எதையும்
ஏற்றுக்கொள்ளும்
எண்ணம் உள்ளவர்கள்
தன்னை
மாற்றிக்கொள்ளவும் தயங்குவதில்லை
அதனால்
அவர்கள்
ஒருபோதும் கலங்குவதில்லை

பயணங்கள்
பாதைகளால்
மட்டுமே
நடத்தப்படுவதில்லை
பாதங்களாலும்……
இரண்டும்
சரியாக இருந்தால்தால்
இன்பமும்
இலக்கும்
எட்டிய தூரத்தில் கிடைக்கும்

பணிவும்
துணிவும்
வெற்றிக்கு த்தேவை
கனிவும்
தெளிவும்
புத்திக்குத்தேவை
மனதை அழகாக
வைத்துக்கொண்டால்
குணமும் அழகாகிவிடும்

>>>> மருத்துவர் மு.பெரியசாமி, புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top