Close
ஏப்ரல் 24, 2026 12:37 காலை

கோடை காலத்தில் அனுமதியின்றி பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல தடை: கலெக்டர்..!

நாமக்கல்லில் வனத்துறை சார்பில் நடைபெற்ற வனத்தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

நாமக்கல் :

கோடை காலத்தில் பொதுமக்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் குறித்து களப்பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது;

தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் நாமக்கல் வனக்கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது, விபத்தில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து ஆலோசனைகள் மற்றும் செயல் விளக்கம் வழங்கப்படுகிறது.

இயற்கையை பாதுகாப்பதில் காடு மற்றும் மரங்களின் முக்கியத்துவம், வனத் தீ சம்பவங்களின் தாக்கம், வனத் தீயை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வனத் தீ விபத்துகளின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தீயை அணைக்கும் பணியில் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, காவல் துறை மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

மாவட்ட வனத் தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து வனத்துறை அலுவலர்களுக்கும் வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை ஏற்பட்ட வனத் தீ விபத்துகளில் 95 சதவிகித விபத்துகள் ஒரே நாளில் அணைக்கப்பட்டுள்ளன.

கோடை காலம் துவங்கு உள்ளதல், டிசம்பர் முதல் ஜீன் வரை பொதுமக்கள் அனுமதியின்றி வனப்பபகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய தீப்பெட்டி, பீடி, சிகரெட், பிளாஸ்டிக் பைகள் எந்த பொருளையும் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் சென்று வனத்தீயினை ஏற்படுத்துவோர் மீது, தமிழ்நாடு வனஉயிரினப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வனத் தீ குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 0427 2900 428 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top