Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

திருவண்ணாமலையா? அருணாச்சலமா? அரசு பேருந்தில் பெயர் பலகையால் சர்ச்சை..!

அருணாச்சலம் என்று பெயரிட்டுள்ள பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பஸ்களில் திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

திருவண்ணாமலை பேருந்துகளில் ‘அருணாச்சலம்’ என பெயர் மாற்றப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள். தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்தின் டூர் பேக்கேஜில் திருவண்ணாமலைக்கு பதிலாக ‘Arunachalam’ என்று குறிப்பிட்டிருந்தனர் அதேபோல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ‘ Arunachalam’ என்று குறிப்பிடப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பதில் அளித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. வழித்தடப் பலகையின் பெயர் இப்போது ‘திருவண்ணாமலை’ என்று திருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் ஒரே மாதிரியான பெயர்களை உறுதி செய்ய அனைத்து பணிமனைகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை என பெயர் மாற்றப்பட்டது

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு டெப்போவில் இருந்து, பெங்களூர் சென்ற அரசு பஸ் எல்.இ.டி., திரையில், திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக அருணாச்சலம் என பெயர் இடம்பெற்றது. இது தொடர்பாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயராகவனை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் ஜெயசங்கர் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலைக்கு ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அண்ணாமலையார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் தமிழ் பெயர் பலகை பதிலாக தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தமிழில் தான் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top