Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

வாடிப்பட்டி அருகே மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்தினை ஓட்டுநர் கரட்டுப்பட்டி தங்கவேல்(25) என்பவர் ஒட்டிக் கொண்டு வந்தார். கார்த்திக் (24) நடத்துனராக இருந்தார். அதில் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று கூச்சலிட்டு சப்தம் போட்டனர்.

இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தும் கம்பிகளில் மோதியதாலும் முருகேஸ்வரி(60), முத்துச்செல்வன் (24), ஹேமா (40) ராஜேந்திரன்(36), தங்கவேலு (30) ஈஸ்வரி (40) உள்பட சுமார் 40 பயணிகள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். விபத்து  குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் வாடிப்பட்டியில் இருந்து குக்கிராமங்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி அரசு செய்து தராதது இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என கூறுகின்றனர்.

குறிப்பாக கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், பொம்மன் பட்டி, கரட்டுப்பட்டி, அம்மச்சியாபுரம், கணேசபுரம், சாலாச்சிபுரம், மேல் நாச்சிகுளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாடிப்பட்டியில் இருந்து பொதுமக்கள் சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லாததால் அந்த பகுதிகளுக்கு செல்லும் ஒன்றிரண்டு மினி பேருந்துகளில் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பயணம் செய்வதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

ஆகையால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக பேருந்து வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top