கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ம் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் நேற்று காலை தொடங்கியது. தாலுகா காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர்இப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நடைபாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரக்கடைகள், ஜூஸ் கடைகள், டிபன் கடைகள், இளநீர் கடைகள் போன்ற கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்கக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.




