Close
மார்ச் 7, 2026 1:17 மணி

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான, கரும்பு அரவையை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு அரவைப் பருவத்திற்கு 2,210 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 36.20 டன்கள் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 80 ஆயிரம் டன் பதிவு கரும்பும், கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி, ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவில்லாக் கரும்புகளை நேரடி பதிவு மூலம் பதிவு செய்தும், மொத்தம் 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2024-25 கரும்பு நடவு பருவத்தில் பார் முறையில் நடவு செய்து அதிக மகசூல் பெற, தமிழக அரசின் மானிய திட்டங்கள் மூலம் ஆலையின் கரும்பு விவசாயிகளுக்கு மானியத்ததொகை ரூ. 23.60 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த 1,004 விவசாயிகளுக்கு 73,000 டன்களுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் ரூ.2.56 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு நிலுவைத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆலை வளாகத்தில் நடைபெறும், எத்தனால் உற்பத்தி ஆலை மேம்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் எத்தனால் உற்பத்தி துவக்கப்படும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் குப்புசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி உள்ளிட்ட ஆலை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top