Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

எட்டாம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து எட்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீப ஜோதியானது தற்போது பனி மூட்டத்திலும் ஜோதிப் பிழம்பாக எரிந்து காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 3-ஆம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர் மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும்.

இந்நிலையில் தீபத் திருவிழா நிறைவடைந்து எட்டாம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்படும் தீப ஜோதி தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

தற்போது பனி மூட்டத்திலும் மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதி பிழம்பாக காட்சியளித்தார். இதனை அண்ணாமலையார் கோவிலுக்கு முன் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகா தீப தரிசனம் நிறைவு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து 11 நாட்கள் மகா தீப தரிசனம் முடிந்த பிறகு, மலை உச்சியில் உள்ள கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு, பல்வேறு மூலிகைகள் சேர்த்து தீப மை தயார் செய்யப்படும். அந்த மையை ஆருத்ரா தரிசனத்தின்போது, நடராஜப் பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்டு, அதன் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top