Close
ஏப்ரல் 23, 2026 9:47 மணி

அக்னி மலையில் தாமரை மலருமா?

ஆன்மீகத்தின் தலைநகரம், ஞானிகளும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி,  பௌர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா ஆகியவற்றால் உலக அளவில் இந்நகரம் புகழ் பெற்றது திருவண்ணாமலை

அதே சமயம் திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் திருவண்ணாமலைக்கு எப்போதும் தனித்துவமான இடமுண்டு.

1949-ல் தமிழக அரசியலில் எரிமலையின் கொந்தளிப்பு போன்ற ஒரு நிகழ்வு

பெரியார்,  1933ம் ஆண்டு வாழ்க்கைத் துணையான நாகம்மை இறந்தபின் 1949-இல் தன்னைவிட  வயது குறைந்த மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். அதேகாலகட்டத்தில் திருவண்ணாமலைக்கு வந்த அப்போது கவர்னராக இருந்த ராஜாஜியை பெரியார் சந்தித்து பேசியதும் பெரும் சர்ச்சையைக்குள்ளாக்கியது.

இது திராவிட கழகத்தில் பிளவை ஏற்படுத்தியது. அண்ணா மற்றும் அவரது ஆதரவாளர்கள்   பெரியாரின் மீதான நம்பிக்கையும் குறைந்தது. இதனால்,அண்ணா தலைமையில், முன்னணி தலைவர்கள் வெளியேறி திமுகவை தோற்றுவித்தனர். 1957 சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ப.உ.சண்முகம் (திருவண்ணாமலை) இன்னும் பலர் வெற்றிபெற்றனர். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மலிங்கம் (திருவண்ணாமலை) இன்னும் பலர் வெற்றிபெற்றனர்.

ஒருங்கிணைந்த வடஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை இருந்த போதிலிருந்தே திமுகவின் கோட்டையாக திருவண்ணாமலை விளங்குகின்றது.

1947ம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நகராட்சியை நிர்வகித்து வருகின்றனர்.  திருவண்ணாமலை நகராட்சியின் முதல் நகராட்சி தலைவராக வெற்றி பெற்ற ப. உ.சண்முகம், திராவிட இயக்கத்தின் முதல் நகராட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலும் குறிப்பாக திமுகவைச் சோ்ந்த ப. உ.சண்முகம் 1971, 1977 தோ்தல்களிலும், 1989, 1996, 2001, 2006 தோ்தல்களில் திமுகவின் கு. பிச்சாண்டியும், 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் திமுகவின் எ.வ.வேலும் தொடா்ந்து வெற்றி பெற்றிருக்கின்றனா்.

இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு 1963 ல் நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம்.

திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பழனி பிள்ளை ஆன்மிக சுற்றுப் பயணமாக ஆந்திர மாநிலம் சென்ற போது, கோதாவரி ஆற்றில் மூழ்கி இறந்து போனார். காலியாக இருந்த திருவண்ணாமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தொகுதியினை தக்க வைத்துக் கொள்ள, வேட்பாளராக பத்ராசலம் பிள்ளை நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, திமுகவின் சார்பில், திருவண்ணாமலை தொகுதியில் 1957 ஆண்டில் வெற்றி பெற்று, 1962ஆம் ஆண்டில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்த ப.உ.சண்முகம் களத்தில் குதித்தார்.

திமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சாதனைகளுக்கு மக்கள் ஆதரவு இதுதான் என்று காட்ட வேண்டும். மத்தியிலும் ஆளுங்கட்சி, மாநிலத்திலும் ஆளுங்கட்சி. நேரடியாக தானே களமிறங்கினார் முதலமைச்சர் காமராஜர்.

மதுரையை விட சிறிய நகரம் திருவண்ணாமலை. ஆனால், மதுரையில் செயல்படுத்தபட்ட குடிநீர் திட்டத்தைவிட அதிக மதிப்பீட்டில், சுமார் 48 லட்ச ரூபாய் குடிநீர் திட்டம் திருவண்ணாமலை நகரத்திற்கு அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் காமராஜரே கிராமம், கிராமமாகச் சென்று, 15 நாட்களுக்கும் மேலாக மக்களை சந்தித்தார். மத்திய, மாநில அமைச்சர்கள் திருவண்ணாமலை தொகுதியில் முகாமிட்டனர்.

திமுகவைப் பொறுத்தவரை, மக்கள் அங்கீகாரத்தை பெற்றே ஆகவேண்டும். இழந்த வெற்றியை மீட்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை, அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.

நடப்பதோ, இடைத்தேர்தல். மத்திய அமைச்சர்களும், முதலமைச்சரும், தேர்தல் களத்தில் பம்பரமாய் சுற்றி வருகிறார்கள். இடைத்தேர்தலுக்காக இளைஞர்களை முன்னிறுத்தி தனியே வியூகம் வகுத்த திமுக, தேர்தல் பொறுப்பாளராக தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் மு.கருணாநிதியை நியமித்து, அவரது தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். திமுகவினரின் மேடைப்பேச்சு மிகப்பெரிய பலம்.

திருவண்ணாமலையில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பேசினார்கள். இந்தி திணிப்பு அபாயம், தமிழ் மொழிக்கு ஆபத்து என்று மேடைதோறும் முழங்கினார்கள். நாட்டில் நிலவும் வறுமைக்கும், பசி, பட்டினிக்கும் காங்கிரஸ் ஆட்சியின் சீர்கேடுகள் என்று கிராமங்களில் திமுகவினர் பரப்புரை செய்தனர்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது,

காகிதப் பூ மணக்காது;

காங்கிரசின் சமதர்மம் இனிக்காது,

இந்தியை மத்திய அரசு திணிக்கிறது;

மெல்லத் தமிழ் இனிச் சாகும், என்று முழங்கினார் அண்ணா.

அனைவருக்கும் தொடக்க கல்வி, மாணவர்களுக்கு சீருடை, தேவைக்கேற்ப குடிநீர் என்று அரசுத் திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் காமராஜர். காங்கிரஸ் வேட்பாளர் பெயர் பத்ராசலம், அதாவது அண்ணாமலை என்று பொருள். தேர்தல் நடப்பதோ திருவண்ணாமலை என்று காங்கிரஸ் கட்சியினர் பரப்புரை செய்தார்கள்.

இந்திய அரசியல் வரலாற்றில், சட்டமன்ற இடைத்தேர்தலில், முதன் முதலாக ஆளுங்கட்சியை தோற்கடித்து, எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.

காட்பாடி முதல் கன்னியாகுமரி வரை கொண்டாட்டங்களுக்கு நாள் குறித்தார் அண்ணா. ஊர் ஊராக மேடை அமைத்து, வெற்றி நாயகர் ப.உ.சண்முகம் கெளரவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் திமுக நடத்திய வெற்றிக் கொண்டாட்டங்கள், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க அடித்தளமிட்டது.

அதிமுக வெற்றி பெறாத தொகுதி….

அதிமுக 1972-இல் தொடங்கப்பட்ட நிலையில், 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ப.உ.சண்முகம் இத்தொகுதியில் போட்டியிட்டாா். ஆனாலும், அவா் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கே. நாராயணசாமியிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு இருக்கின்றன.

2006-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திமுகவின் கு.பிச்சாண்டியை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட வி.பவன்குமாரும், 2011 தோ்தலில் திமுகவின் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவின் எஸ்.ராமச்சந்திரனும், 2016 தோ்தலில் திமுகவின் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவின் பெருமாள்நகா் கே.ராஜனும் தோல்வியைத் தழுவினா்.

2021 பேரவைத் தோ்தலில் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்டது பாஜகவின் எஸ்.தணிகைவேல். அவா் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலுவிடம் தோல்வியுற்றாா்.

தாமரை மலரும் தமிழகம் செழிக்கும் என பாஜக வேட்பாளர் ஏழுமலையும் திருவண்ணாமலை எப்பொழுதுமே திமுகவின் கோட்டை தான் என அமைச்சர் வேலுவும் தங்களது கூட்டணி கட்சி தலைவர்கள், உறுப்பினர்களுடன் யூகங்கள் அமைத்து பம்பரமாக சுழன்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தொடா்ந்து அதிமுக வெற்றி பெறாத தொகுதி என்ற நிலையை மாற்றி, 2026 பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுமா அல்லது திமுகவின் கோட்டையில் நுழைய முடியாத இலை என்ற பெயா் நீடிக்குமா, அல்லது இலையுடன் கூட்டணி அமைத்து களம் காணும் தாமரை மலருமா என்பது தோ்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top