மதுரை – திருச்சி 4 வழிச்சாலை, கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதியில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில், ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் திரும்பி, வஞ்சிநகரம் கிராமத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீதும் மோதியது. நிழற்குடை முழுவதும் சேதமானது.
இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர். முதலில் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




