உள்நாட்டுப் போரின் போது முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இலங்கை தமிழ் அகதிகள், எவ்வித சட்டச் சிக்கல்களுமின்றி மீண்டும் தாயகம் திரும்புவதற்கு வசதியாகச் சிறப்பு தளர்வுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐநா அகதிகள் அமைப்பின் ஆதரவின் கீழ் விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்பும் அகதிகள் சந்தித்து வந்த சட்டப் போராட்டங்களுக்கும் தடைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள குறிப்பின்படி: ஆக. 1, 2006-க்கு முன் சென்றவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டிலிருந்து வெளியேறிய நபர்கள், கொலை, தேசத்துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த அரசின் மாநில உளவுத்துறை மூலம் பரிசோதிக்கப்படுவார்கள்.
உளவுத்துறையின் சோதனையில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை என உறுதிசெய்யப்படும் நபர்கள், தற்காலிக பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். முறையற்ற வழியில் நாட்டை விட்டு வெளியேறியதற்காகக் குடிவரவுச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த மே 19, 2009 வரையிலான காலகட்டத்தில் முறையான ஆவணங்களின்றி வெளியேறியவர்களுக்கும் இதே தளர்வுகள் பொருந்தும்.
கொலை, தேசத்துரோகம் போன்ற தீவிரக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நபர்கள், நுழைவுத் துறைமுகத்திலேயே கைது செய்யப்பட்டுச் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.
இந்தியாவில் உள்ள அகதிகள் சுய விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்புவதில் நீண்டகாலமாகச் சிக்கல்கள் நிலவி வந்தன.
கடந்த ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்த 75 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர், ஐநா அகதிகள் அமைப்பின் உதவியோடு அங்கீகாரம் பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். ஆனால், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம், இந்தியாவில் உள்ள அகதிகள் தாயகம் திரும்புவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் குறித்த பெரும் கவலையை உருவாக்கிய நிலையில், தற்போது அரசு இந்தத் தளர்வுகளை அறிவித்துள்ளது.
1983-ல் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து தீவிரமடைந்த ஆயுதப் போராட்டங்கள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தனர்.
2002 முதல் 2022 பிப் வரையிலான காலக்கட்டத்தில் 18,000-க்கும் மேற்பட்டோர் ஐநா அகதிகள் அமைப்பின் உதவியுடன் தாயகம் திரும்பியுள்ளனர். போர் முடிவடைந்த ஜனவரி 2009 முதல் ஜூன் 2025 வரை 18,500-க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர்.
2026-ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களிலும் வெளியிலும் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவிலேயே பிறந்தவர்கள் ஆவர்.
வாழ்வாதாரம், ஆவணங்கள் பெறுதல் மற்றும் நீண்டகாலச் சட்டப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் நிலவி வரும் சூழலில், இலங்கை அரசின் இந்த புதிய குடிவரவுத் தளர்வு நடவடிக்கை, அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


