Close
ஆகஸ்ட் 11, 2026 7:52 மணி

போதைப்பொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் மதுபாலன் பரிசு வழங்கினார். அருகில் எஸ்.பி., யாதவ் கிரீஷ் அசோக்.

சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர், ஒரு உறுதி மொழி, ஒரே இலக்கு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற மாநிலம் தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் போதைப்பொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், காவல்துறை மூலம் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு குட்கா போன்ற போதை போருட்கள் விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் சுமார் 3,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ப.வேலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள், செங்குந்தர் கல்விநிறுவனங்கள், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

போதைப்பழக்கம் என்பது ஒரு மாணவரை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையே பாதிக்கும் விஷயமாகும். அதனால், நம்முடைய நண்பர்கள் யாரும் வழிதவறிப் போகாமல், நாம் அனைவருமே அவர்களை வழிநடத்த வேண்டும்.

தவறான பாதையில் செல்வதை கண்டறிந்தால், நம்முடைய ஆசிரியர்களிடமோ அல்லது காவல்துறையினரிடமோ தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்க முடியும். மேலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நம் மாவட்ட அளவில் மனநல மருத்துவர் குழு, உணவு பாதுகாப்பு குழு இருக்கின்றனர் என கூறினார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் மதுபாலன் தலைமையில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்றனர். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில், போதைப்பொருள் தடுப்பு மன்றம், என்சிசி, என்எஸ்எஸ், தன்னார்வ குழுக்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் குழுக்களைச் சேர்ந்த 12 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு தலா ரூ.15,000, 2ஆம் பரிசு தலா ரூ.10,000, 3ஆம் பரிசு தலா ரூ. 5000 வீதம் ரூ.1.20 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை, விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top