தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிவில் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொறியாளர்களின் நலன் மற்றும் மாநிலத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக, அமைப்பின் மாநிலத் தலைவர் புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
பொறியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டி பொறியியல் தொழிலை முறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனி ‘பொறியாளர்கள் கவுன்சில்’ அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அரிய கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க அரசு கொண்டுவந்துள்ள தற்காலிகத் தடையை வரவேற்று நன்றி தெரிவித்ததோடு, இத்தடையை நிரந்தரத் தடையாக அமல்படுத்தி இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
அதேவேளையில், தற்போதைய சூழலில் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான திட்ட ஒப்புதல் சான்றிதழ்கள் பெறும் நடைமுறை கடந்த காலத்தை விட எளிமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வித கூடுதல் கட்டணம் அல்லது ‘எக்ஸ்ட்ரா அமௌன்ட்’ என்ற முறைகேடான நடைமுறைகளுக்கு இடமின்றிச் சான்றிதழ்கள் கிடைப்பதால், பொதுமக்களுக்குக் கட்டுமானத் துறையினர் விரைவாகவும் வெளிப்படையாகவும் சேவைகளை வழங்க முடிகிறது என அவர் குறிப்பிட்டார்.




