Close
ஆகஸ்ட் 18, 2026 10:03 மணி

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் 16,200 ஏக்கர் பரப்புள்ள ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த பகுதி விவசாயிகள் வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு கோரை போன்ற நீண்ட கால பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக ராஜாவாய்க்கால் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை தினசரி நீர் பாய்ச்சவேண்டிய ஒரு பயிராகும். வெற்றிலை பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் செலவாகிறது.

இந்த நிலையில் 5 பாசன வாய்க்கால்களிலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து நானும் பல்வேறு கட்ட மனுக்களை கொடுத்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிலை பயிருக்கு தினந்தோறும் நீர் பாச்சினால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும். பயிர் கருகிவிட்டால் மீண்டும் அந்த பயிர் சாகுபடி செய்வதற்கான தாய் செடி வாங்குவதற்கு விவசாயிகள் ஆந்திரா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இதை கருத்தில் நீர்வளத் துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து 5 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top