வானம்பாடி இயக்கத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மேத்தா, மரபுக்கவிதையின் பலத்தையும் புதுக்கவிதையின் சுதந்திரத்தையும் இணைத்து எளிய நடையில் ஆழமான தத்துவங்களை வழங்கியவர்.
காதலை மென்மையாகவும் புரட்சிகரமாகப் பாடிய இவர், மனிதர்களின் வலிகளையும் சமூக அவலங்களையும் சமரசமின்றி சாடியவர். இவரது கவிதைகள் சாமானிய மக்களின் மனங்களையும் எளிதில் சென்றடைந்தன. உவமை உருவகங்களில் பழமையும் புதுமையும் சேர்த்து மிகவும் எளிய நடையில் கற்பனைத்திறனை வெளிப்படுத்தி கவிதை புனைந்த இவர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல சிறந்த ஒரு பாடலாசிரியரும் கூட. சினிமாத்துறையிலும் இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இவர் எழுதிய சில பாடல்களில் எனக்கு பிடித்தவை..,
ராஜ ராஜ சோழன் நான்
யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ…
மயில் போல பொண்ணு ஒன்று…
பாடு நிலாவே தேன் கவிதை…..
கற்பூர பொம்மை ஒன்று…
“கண்ணீர்ப்பூக்கள்” சமூக அநீதிகள் மற்றும் துயரங்களை மையமாகக் கொண்டு பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. எளிய சொற்களைப் பயன்படுத்தி ஆழமான சிந்தனைகளையும் சமூகக் கோபத்தையும் வெளிப்படுத்தும் மு. மேத்தாவின் தனித்துவமான நடை இத்தொகுப்பில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.
1970 களில் வெளியான இக்கவிதைகள், அக்கால இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. சோகத்தையும் வாழ்வியலின் யதார்த்தத்தையும் கவித்துவமாகப் பதிவு செய்ததால், பலரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தது. நான் வாசித்த முதல் கவிஞர் முமேத்தாவுடன் பழகியதும், உரையாடியதும் இனிமையான பொழுதுகள். இன்று காலை எழுந்தவுடன் அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.
பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞரே
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋




