Close
செப்டம்பர் 7, 2026 3:32 மணி

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும்: கொ.ம.தே.க., எம்.பி., வேண்டுகோள்

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் ஏற்கனவே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்தவுடன், அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு, நகரத்தில் இருந்த பழைய மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது.

அதையடுத்து, நாமக்கல் நகர மக்களின் நலன் கருதி, பழைய இடத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அரசியல் கட்சியினர், பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. கொ.ம.தே.க., எம்.பி., மாதஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

ஏற்கனவே இருந்த, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இரு இடங்களில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டதால், பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் பயனில்லாமல் பாழடைந்து, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அந்த இடத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தொலைவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அவசர நிலையில் கொண்டு செல்லும்போது, பலர் உயிரிழக்க நேரிடுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, இதற்கான கோரிக்கையை வலியுறுத்தினேன். அவர்களும் உறுதியளித்த நிலையில், தேர்தல் வந்ததால் அதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அரசு, பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், தாலுகா அளவிலான மருத்துவமனை அமைக்க வேண்டும். இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜை சந்திந்து வேண்டுகோள் விடுக்கப்படும். அவர் மூலம் முதல்வரை சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இவை நடைபெறாத பட்சத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், பா.ஜ., காங்., அ.தி.மு.க., த.மா.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top