Close
ஏப்ரல் 28, 2024 2:43 மணி

நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஜி மாரிமுத்து மாரடைப்பால் மறைவு

தமிழ்நாடு

திரைபட்ட நடிகர் மாரிமுத்து

நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஜி மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஜி.மாரிமுத்து மாரடைப்பால் சென்னையில் (8.9.2023) வெள்ளிக்கிழமை  காலை  காலமானார். அவரது திடீர் மறைவு தமிழக திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட இயக்குனர்கள் மணிரத்தினம், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கண்ணும் கண்ணும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ஜி.மாரிமுத்து அறிமுகமானார்.பின்னர் விமல், லட்சுமிமேனன்  நடிப்பில் வெளியான புலிவால் திரைப்படத்தையும் இயக்கினார்.
இந்நிலையில் நடிகராக அறிமுகமான மாரிமுத்து தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அண்மையில் வெளியான விக்ரம், ஜெயிலர், கொம்பன், பரியேறும் பெருமாள் என பல படங்களில் நடித்து வில்லன் ரோலிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்க ளிடம் தனி கவனம் ஈர்த்தார்.
 தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில்,எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசுவதற்காக இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் தியேட்டருக்கு காலை 6.30 மணி அளவில் சென்றார். தன்னுடைய பகுதியில் வரும் காட்சிகளுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த அவர் காலை சுமார் 8:30 மணி அளவில் தனக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறி தன்னுடைய காரை அவரே ஓட்டிக்கொண்டு வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு சென்றார். காரை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்குள் சென்று மருத்துவமனை ஊழியர்களிடம் கூறிவிட்டு வீல் சேரில் அமர வைத்து பரிசோதனைக்காக உள்ளே அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போதே சில நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்தது. உடனடியாக மருத்துவர்கள் உடலை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
இயக்குனர் மாரிமுத்துவின் மரணம் தமிழ் திரை உலகை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவருக்கு மனைவி, ஒரு மகன் மகள் உள்ளனர். சென்னையில் சொந்த வீடு கட்டி தனது குடும்பத்துடன் குடியேற திட்டமிட்டு வீடு கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.தனது வீட்டு பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து அதில் குடியேற திட்டமிட்டு இருந்தநிலையில் அவர் திடீரென காலமானது அவரது குடும்பத்தாரிடையே பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 Comment

  1. அற்புதமான நடிகர். தமிழ் திரையுலகில் சிறந்த வில்லன் நடிகராக வலம் வர வேண்டியவர் 57 வயதில் காலமானதை ஏற்க மனம் மறுக்கிறது….

    நாராயண்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top