Close
மே 10, 2024 10:18 காலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம்

தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வ கோட்டையில் நடைபெற்ற  உலக உணவு பாதுகாப்பு தினம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வ கோட்டையில்  உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப் பிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மெய்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டாரக் கிளையின் சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் தன்னார்வலர் ரஞ்சனி  வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார செயலாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு உலக உணவு பாதுகாப்பு தினம் குறித்து பேசியதாவது:

2018 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக் கொண்டபிறகு முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் , 2019 ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதற்கும், மேலும் இனி வரும் ஆண்டுகளில் கொண்டாடுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது.

உலகத்தில் உயிர் வாழ உணவு தான் முக்கியம். உணவில்லை யேல் உயிர்கள் இல்லை. இயந்திரம் போன்று இயங்குவதற்கு எரிபொருள் எவ்வாறு தேவைப்படுகிறதோ அதே முறையில்தான் மனித உடலின் செயல்பாட்டிற்கு தேவையான எரிபொருளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதற்குறிய சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

அதுபோலவே, மனிதன் தேவைக்கு அதிகமாக உணவுகளை உட்கொண்டாலும், தனது தேவைக்கு மட்டுமே உள்ள உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு மீதியை கழிவுகளாக வெளியேற்றி வீணாகிவிடும்.மக்கள் தொகை பெருகப் பெருக உணவுத் தேவைகளும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

மேலும் மனிதன் வசிப்பதற்கு இடமும் அதிகமாக தேவைப்படுவதால் உணவு தானியங்களை உற்பத்தி செய்யப்படும் நிலங்களும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மனிதனுக்கு தேவையான அளவு உணவுப் பொருட்களும் பற்றாக்குறையாக உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் நமது தலைமுறைகளுக்கு தேவையான உணவு கிடைத்து விட தற்போதுள்ள இயற்கை பேரிடர்களை அனுசரித்தும், தனிமனித பொருளாதார நிலையில் சிந்தனை செய்தும், உண்ணும் உணவுப் பொருட்களை பாதுகாத்து பயன்படுத்துவோம்.

உலகளவில் மக்கள் தினமும் 40 சதவீத உணவை வீணாக்கூவதாக ஒர் அறிக்கை கூறுகிறது. தரமற்ற உணவு கலவைகளை நாகரீகம் என்ற போர்வையில் ஆடம்பரமாக காட்டிக் கொண்டு அவைகளை பிடிக்காததால் நாசுக்காக தொட்டுவிட்டு சுவையில்லை என்று குப்பையில் கொட்டுகிறார்கள்.

இது போன்ற நிகழ்வுகளால் மனிதனுக்கு பாதுகாப்பற்ற உணவு கிடைக்கிறது. இதனால் பல வியாதிகள் மனித குலத்தை பார்க்க வைக்கிறது. எனவேதான் உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பிற்காக பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி சுத்தமான உணவு பொருட்களை வாங்கி வீட்டிலேயே சுகாதாரமான சமைத்து உண்ண வேண்டும். சுத்தமான குடிநீரை பயன்படுத்த வேண்டும் முக்கியமாக தேவைக்கு மட்டுமே உண்டு, உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதுவே நாம் நமது தலைமுறைக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமையாகும் என்றார் ரகமத்துல்லா.  இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் லாவண்யா, தேவி, ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top