Close
ஜூன் 19, 2026 1:46 மணி

அமெரிக்கா – இரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகிறது!

டிரம்ப் மற்றும் மொஜ்தபா கமேனி

பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான பதற்றங்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் இரானும் ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் முதலில் அறிவிப்பு

இந்த முக்கிய ராஜதந்திர திருப்புமுனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். பல பிராந்திய நாடுகளின் தீவிர மத்தியஸ்த முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தவிர்த்துவிட்டு, ராஜதந்திரப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தை எளிதாக்க உதவிய கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தல்

பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப்:

“இஸ்லாமிய குடியரசான இரானுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும், வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மீண்டும் திறக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “உலக நாடுகளின் கப்பல்களே, உங்கள் இன்ஜின்களைத் தொடங்குங்கள். எண்ணெய் பாயட்டும்!” என்று அவர் உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் இரானின் நிலைப்பாடு:

ராணுவ நடவடிக்கை நிறுத்தம்: லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இன்று இரவு முதல் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிரந்தரமாக நிறுத்தப்படும்.

முற்றுகை நீக்கம்: இரான் மீதான கடல்வழி முற்றுகை உடனடியாகவும் முழுமையாகவும் நீக்கப்படும் என்று இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: இந்த ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாகச் செயல்படுத்திய பிறகு, இறுதி அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று இரான் கூறியுள்ளது.

இதற்கிடையில், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரெம்ப் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இரான் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படத் தவறினால், மீண்டும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் அல்லது மத்திய கிழக்கின் வருவாயில் 20% பங்கைப் பெற்றுக்கொண்டு, அப்பகுதியின் பாதுகாப்பாளராக அமெரிக்கா செயல்படும் ஒரு பரந்த ஏற்பாடு உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்ப்புகளையும் மீறி இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஆதரித்துப் பேசியுள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை முறைப்படி செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் குறித்து அடுத்த சில நாட்களுக்கு மத்தியஸ்த நாடுகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ விழாவில் இரு நாடுகளும் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமைதி திரும்புவது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top