பிரேசிலில் பங்கி ஜம்பிங் சாகச விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிறைக் கட்டாமலேயே அங்கிருந்த பணியாளர்கள் ஒரு இளம் பெண்ணை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதால், அவர் 130 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் அங்கு கூடிருந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘ஸ்கெலிட்டன் பாலத்தில்’ ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பங்கி ஜம்பிங் சாகச விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற இளம் பெண் வந்துள்ளார்.
சம்பவத்தன்று, அங்கிருந்த பணியாளர்கள் மரியா எடுவார்டாவை பாலத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கீழே குதிக்க அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடலில் அத்தியாவசியமான பாதுகாப்பு கயிறு இணைக்கப்படவில்லை என்பதை பணியாளர்கள் கவனிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மரியா பாலத்தில் இருந்து குதித்த அடுத்த சில நொடிகளில் அவர் கயிறு இல்லாமல் கீழே விழுவதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அலறினர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவில், மரியா கீழே விழும்போது அங்கிருந்தவர்கள், “கயிறு, மக்களே கயிறு எங்கே?” என்று அலறுவது பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு கயிறு உடலில் கட்டப்படாததால், மரியா எந்தவித கட்டுப்பாடும் இன்றி நேராக 130 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக அவசரக்கால மீட்புப் படையினர் விரைந்து வந்த போதிலும், மரியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மரியா தான் சாகசத்தில் ஈடுபடவிருந்த பாலத்தின் படம் மற்றும் தனது கையில் கட்டப்பட்டிருந்த ஜம்ப் பேண்டுகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அதில், “பாலத்தில் இருந்து குதிக்க என்னை அனுமதித்த அந்த பைத்தியக்காரன் யார்?” என்று ஜாலியாக ஒரு வாசகத்தை எழுதியுள்ளார். அவர் விளையாட்டாகப் பகிர்ந்த இந்த கடைசிப் பதிவு, தற்போது அவர் உயிரிழந்த நிலையில் இணையத்தில் வைரலாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சாகச விளையாட்டைக் காண்பதற்கு மரியாவின் வருங்கால கணவரும் அந்த பாலத்திற்கு வந்திருந்தார். தனது கண் முன்னே மரியா கயிறு இல்லாமல் கீழே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த அலட்சியக் கொலை தொடர்பாக சிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பங்கி ஜம்பிங் சாகசத்தை ஒருங்கிணைத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா, ஊழியர்களின் அலட்சியம் எந்த அளவில் இருந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சாகச சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்த சம்பவம் உலகளவில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்த பிரேசில் அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

