நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 390 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பரிசீலனை செய்த ஆட்சியர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ மூலம் கறவை மாடு வாங்குவதற்கு 11 பயனாளிகளுக்கு 50 சதவிகிதம் அரசு மானியத்தில் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 11 லட்சம் கடன் உதவி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவிகிதம் அரசு மானியத்தில் தலா ரூ. 1.25 லட்சம் வீதம் ரூ. 2.50 லட்சம் உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 14,250 கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், 3 பேருக்கு ரூ. 1.42 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 11 பேருக்கு ரூ.70,860 மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என மொத்தம் ரூ.15.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா, இளைஞர் விளையாட்டு கால்பந்து போட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் 5 பேர் மற்றும் நவோதயா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1 மாணவி என 6 பேர் கலந்து கொண்ட தமிழ்நாடு அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் உமா வாழ்த்து தெரிவித்தார்.




