நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.
நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டாக்கள் ஏதுமின்றி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதையடுத்து, மாநிலம் முழுவதும், அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொண்டு, பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும், நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ், வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா, நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நாமக்கல் மாநகரட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ், பட்டா வழங்க விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குடியிருப்புவாசிகளிடம், பல ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். தொடர்ந்து, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டுமனை வரன்முறைப்படுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விரைவில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
அதையடுத்து, மோகனூர் ஒன்றியம், பனமரத்துப்பட்டி ஊராட்சி மற்றும் பெரம்மாண்டபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பள்ளி சீருடைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதா, பள்ளியில் அடிப்படை வசதிகள், கழிவறை, சமையல் கூடம், பள்ளி வகுப்பறைகள் சுத்தகமாக, சுகாதாரமாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்.