Close
ஏப்ரல் 23, 2026 10:00 மணி

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: தேனி மாவட்ட வாலிபர் கைது

நாமக்கல் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ரூ. 1.07 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த சின்னபெத்தாம்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (35). அவர், நாமக்கல் அருகே உள்ள, நல்லிபாளையத்தில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பழமுதிர் சோலை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 11:00 மணிக்கு, வழக்கம்போல் விற்பனையை முடித்து கடையை பூட்டி விட்டு, கடையின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கி உள்ளார். அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு, கடையை திறக்க முயன்றபோது, பின்புறம் உள்ள தகர கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த, ரூ. 1.07 லட்சம் ரொக்கப்பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து சரவணகுமார், கடையில் வைத்திருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார்.

அப்போது, கடைக்கு தினமும் சில்லரை வாங்க வரும், அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் சுந்தரம் என்பவர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top