சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் தெருவை சேர்ந்தவர் கபிலவாசன், கூலி தொழிலாளி. அவரது மனைவி ராஜாமணி (27). இந்த தம்பதியருக்கு, நவ்யாஸ்ரீ (8) என்ற மகளும், தருண் (3) என்ற மகனும் உள்ளனர்.
ராஜாமணியின் அக்கா சுமதியின் மகன் ராகுல் (25) என்பவர், மொபைல் போனில் அடிக்கடி ஆபாச படம் பார்த்து வந்துள்ளார். அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராகுலை கேவலமாக பேசி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதி இரவு 8 மணிக்கு, ராஜாமணி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராகுல், குழந்தை தருணை (3) கீழே தள்ளி காலால் கழுத்தை மிதித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ராஜாமணி, இது குறித்து தட்டிக்கேட்டுள்ளார்.
ராஜாமணியை உதைத்து கீழே தள்ளிவிட்டு மீண்டும் குழந்தையின் கழுத்தில் மிதித்துள்ளார். ராஜாமணியின் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அண்ணன் தியாகராஜன் ஓடி வந்து குழந்தையை மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்ப்த்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, நாமகிரிபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ராகுலுக்கு, ஆயுள் தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அதையடுத்து, அவர் காவல்துறை பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.




