நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ. 8.70 கோடி மதிப்பில், குடும்ப நல நீதிபதி, எஸ்சி, எஸ்சி நீதிமன்ற சிறப்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், கூடுதல் மகளிர் நீதிபதி ஆகிய 5 நீதிபதிகளுக்கான அரசு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், நாமக்கல் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான இளந்திரையன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குடியிருப்பு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படியும், நாமக்கல் மாவட்ட நீதித்துறை சார்பில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் மற்றும் சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
நமது நாட்டில், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பணியிடத்தில் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்படுகின்றன. அவை நாகரிக சமுதாயத்தின் அடித்தளம் ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டம், பாலின பாகுபாடு காட்டாமை மற்றும் சம வாய்ப்புக்கான உரிமையை உறுதி செய்கிறது.
சட்டங்கள், எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும், அவற்றை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே அதன் நோக்கங்களை அடைய முடியும். நாடு முழுவதும் உள்ள பெண்கள், பாலின அடிப்படையிலான வன்முறை, பாரபட்சமான வேலைவாய்ப்பு நடைமுறைகள், அரசியல் பிரதிநிதித்துவமின்மை, கலாச்சார நிலைப்பாடுகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2023ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 32.8 சதவீதமாக உள்ளது. இது உலக சராசரியான 50 சதவீதத்தை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. பார்லிமெண்டில் லோக்சபா பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை 15 சதவீதம் மட்டுமே உள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, யதார்த்தமாக இல்லாமல் ஒரு லட்சியமாகவே உள்ளது.
இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர். இந்தியாவில் தொழில்நுட்ப பட்டதாரிகளில் பெண்கள் இப்போது 43 சதவீதமாக உள்ளனர், இது உலக அளவில் மிக உயர்ந்த ஒன்றாகும்.
உலக அளவில் தொழில்முனைவோர், மாஸ்டர்கார்டு குறியீட்டின் படி. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் தலைமைப் பொறுப்பு வகிக்க முடிந்தது.
அதிகாரம் பெற்ற பெண்கள் சமூகங்களை மேம்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம். பாதுகாக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பாக நாடுகளை வழிநடத்துகிறார்கள். பெண்கள் சமத்துவமாக நடத்தப்படும்போது ஜனநாயகமும் நியாயமான பாதையில் செல்ல முடியும். ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு சமுதாயமே கல்வி பெரும் என்பது நமது முன்னோர் வாக்கு. நமது சட்டங்களும், கோர்ட்டுகளும், நமது கூட்டு மனசாட்சியும் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சண்முகப்பிரியா, நாமக்கல் கலெக்டர்ஆட்சியர் துர்கா மூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் விமலா, மாவட்ட நீதிபதிகள், மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




