நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல், அருகே லத்துவாடியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சுமார் 510 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவமனை, மாணவ மாணவியர் ஹாஸ்டல்கள், வேளாண் அறிவியல் நிலையம், சிறிய வானொலி நிலையம், தீவன ஆய்வு மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. நவீன ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் தைவான் நாட்டு தோல் தொழிற்சாலை மற்றும் மத்திய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லத்துவாடி கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இதையறிந்த லத்துவாடி கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர் கால்நடை மருத்துவக் கல்லூரி முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரசம் செய்தனர்.

பின்னர் அவர்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தோல் தொழிற்சாலை அமைந்தால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பாதிக்கும் எனவே தோல் தொழிற்சாலை அமைக்க கூடாது என மனு அளித்தனர்.
இந்த நிலையில், தோல் தொழிற்சாலை அமைப்பது, தொடர்பாக தைவான் நாட்டு நிறுவனத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி, டிஆர்ஓ சுமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பாற்ற வகையிலும் தொழிற்சாலை அமைய இருப்பதாக வரும் தவறான செய்திகளை யாரும் பொது மக்களிடையே பரப்ப வேண்டாம்.
வதந்திகளை பரப்புவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்துறை சார்பாக அமைக்கப்படும் தொழிற் பூங்காக்களுக்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்




