Close
மார்ச் 7, 2026 6:03 மணி

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டாவாறு செல்கிறது. (உள் படம்) ஆற்றிற்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டு தடுப்பு அமைத்துள்ளனர்.

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் 3ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் முழுமையாக 16 கண் உபரி நீர் போக்கி மூலம் அணையில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர் மேலாண்மைத் துறை மூலம் மாவட்டம் மூழுவதும் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோகனூர் அருகே காவிரியின் இருகரைகளையும் தொட்டவாறு, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையொட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், காவிரிப்படித்துறை மற்றும் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரியில் ஆங்காங்கே புதை குழிகள், சுழல்கள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ, துணி துவைக்கவோ ஆற்றுக்கு போக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றிற்கு செல்பவர்களை தடுக்கும் வகையில், ஆற்றுக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் போரிகார்டு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top