கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும்.
இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வில்வித்தையில் அவர் சிறந்து விளங்கியதால் விழா சமயத்தில் வில் வித்தைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, ஆர்டிஓ சாந்தி ஆகியோர் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஜா மலர்கள் அலங்கரிக்கப்பட்ட குதிரை, மான் வடிவம், பலவண்ண மலர்கலால் காதல் சின்னம், காய்கறிகளை கொண்டு கரடி, பறவைகள், தானியங்களை கொண்டு செய்யப்பட கால்நடைகள், பழங்களில் முதல்வர் படம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செம்மேட்டில் உள்ள கலையரங்கில் கிளாரினெட் வித்வான் பிரபுவின் மங்கள இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவியரின் கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொல்லிமலை அட்மா குழு தலைவர் செந்தில்முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி, கொல்லிமலை வட்டாட்சியர் சந்திரா, பிடிஓ ஈஸ்வரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.




