நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சைத் துறை இயக்குனரகம் சார்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் என்னும் 15வது தேசிய கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக செல்லப் பிராணிகள் மருத்துவம், அறுவை சிகிச்சை, இனப்பெருக்கம், கால்நடைகளுக்கான மருத்துவம், அறுவை சிகிச்சை, இனப்பெருக்கம், அயல்நாட்டு பறவைகளுக்கான மருத்துவம் மற்றும் வனவிலங்குகளுக்கான மருத்துவம் குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டது.
மாநாட்டில், 11 மாநிலங்களில் இருந்து 439 மாணவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தொடக்க விழாவில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மாநாட்டு தொகுப்பை வெளியிட்டு பேசினார். நாமக்கல் தங்கம் புற்றுநோய் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் குழந்தைவேல், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல் மற்றும் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை மேலாண்மைக் குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் பேசினார்கள்.
மாநாட்டின் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரா ஹேட்சரிஸ் துணைப் பொது மேலாளர் மேகநாதன் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி பேசினார். கோவை குணசேகரன், பல்கலைக்கழக சிகிச்சைத் துறை இயக்குநர் அனில் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெரிய பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் பிரிவில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றது. செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் பிரிவில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றது.




