Close
மார்ச் 7, 2026 8:01 மணி

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி நாமக்கல்லில் உதயம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், அதன் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, புதிய மத்தியக் கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை, வருகிற 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, நாமக்கல்லை தனி மாவட்டமாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கடந்த 28 ஆண்டுகளாக, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வந்தன.

தமிழக முதல்வர் நடவடிக்கையால், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் மொத்தம் 351 மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் புதிய மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் துவக்கப்படவில்லை. நாமக்கல் மத்தியக்கூட்டுறவு வங்கி 352வது வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மத்தியக்கூட்டுறவு வங்கி 24வது மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கியை துவங்குவதற்கு, தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாமக்கல் மோகனூர் ரோட்டில் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு, மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கிக்கு டெபாசிட்டுகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட ரூ. 3.500 கோடி மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கீழ் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 30 கிளைகள் இயங்கும். இந்த கிளைகள் மூலம், 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 26 பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை தங்கள் கணக்குகளை வைத்துள்ளனர்.

மொத்தம் 746 கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த வங்கி கிளைகளில் வங்கி சம்மந்மான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும். மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்கனவே எத்தனால் தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி அதனை விரிவாக்கம் செய்ய, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம், சர்க்கரை ஆலைக்கு ரூ. 6.75 கோடி கடன் உதவி வழங்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தொடக்க விழா வருகிற 14ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்கியை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகிக்கிறார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கூட்டுறவு இணைப் பதிவாளர் அருளரசு, மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்கின்றனர் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top