Close
மார்ச் 7, 2026 6:03 மணி

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

வேலுசாமி, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக விவசாயத்தில் ஒருபகுதியாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பால், தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது .

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ 3 உடன் சேர்த்து ரூ.38 ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45 ம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பால் உற்பத்தி செய்ய கால் நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு செய்யும் வேலை ஆட்கள் கூலியும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை, தமிழக விவசாயிகளுக்கு கட்டுப் படியானதாக இல்லை. எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் பால் கொள்முதல் விலையில் இருந்து, பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் உள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. உனடியாக பாலுக்கு, தற்போதுள்ள விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி, முதல் கட்டமாக சேலம் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் பால் பண்ணை முன்பு வருகின்ற 22ம் தேதி கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top