Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

தாயுமானவர் திட்டம் - கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார்.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கும் தாயுமானவர் என்ற திட்டத்தை, தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ரேஷன் கடையில் தாயுமானவர் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அந்த கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் (79), செல்லம்மாள் (82), வாங்கலாயி (73) ஆகியோரது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 915 ரேஷன் கடைகளைச் சேர்ந்த சேர்ந்த, 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 52,099 ரேஷன்கார்டுதாரர்களும், 2,945 ரேஷன் கார்டுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், என மொத்தம் 55,044 ரேஷன் கார்டுகளில் உள்ள, 82,746 பயனாளர்களுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று, ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்ய்படும்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 70 வயதிற்கும் மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ. 59.65 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொ) செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top