தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என, மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் அருகில் உள்ள ஏலூரில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், ராசிபுரம், புதுச்சத்திரம் பிரதேச குழுவின், 3வது மாநாடு நடைபெற்றது. மாதர் சங்க நிர்வாகி தனம் கொடியேற்றினார்.
தலைவர் கோமதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராணி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் சசிகலா சிறப்பு அழைப்பாளாக கலந்துகொண்ட பேசினார்.
மாநாட்டில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, தமிழக அரசு பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, புகார் அளிக்க வரும் பெண்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டு நிலமற்ற ஏழை மக்களுக்கு, தமிழக அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், மாதர் சங்க தலைவராக கோமதி, செயலாளராக லட்சுமி, பொருளாளராக தனம், துணைத் தலைவராக வசந்தா, துணை செயலாளராக புஷ்பலதா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.




