Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

மோகனூர் பகுதியில் கடும் சூறாவளிக்காற்று, மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

மோகனூர் வட்டாரத்தில் வீசிய கடும் சூறாவளிக்காற்றால், மரக்கிளைகள் முறிந்து உயர் அழுத்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, எஸ்.வாழவந்தி, வளையப்பட்டி பகுதியில் துணை மின் நிலையயங்கள் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையங்களில் இருந்து, பாலப்பட்டி, மணப்பள்ளி, ஆரியூர், பேட்டப்பாளையம், மோகனூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி, தோப்பூர், வளையப்பட்டி, ஒருவந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பகல், 12 மணியளவில், எஸ்.வாழவந்தி பகுதியில், பலத்த சுறாவளி காற்று வீசியது. அதனால், ஆங்காங்கே உயர் அழுத்த மின் கம்பி செல்லும் பாதையில் உள்ள மரங்களின் கிளைகள், காய்ந்த தென்னை மட்டைகள் முறிந்து மின் கம்பி மீது விழுந்தது.

அதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, மின் ஊழியர்கள் அவற்றை சரி செய்யும் பணியில் பல மணி நேரம் ஈடுபட்டனர். ஒவ்வொரு பகுதியிலும் உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்து கிடந்த தென்னை மட்டைகளையும், மரக்கிளைகளையும் அகற்றி மின் இணைப்பு வழங்கினர்.

இதன் காரணமாக, பாலப்பட்டி, எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பேட்டப்பாளையம், மணியங்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 7 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது. பகல், 12 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, மீண்டும் இரவு 7 மணிக்கு மேல் வழங்கப்பட்டது.

இந்த மின் தடை காரணமாக, பொதுமக்கள், விவசாயிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மின்சார வாரியத்தில் மிகவும் குறைந்த அளவு பணியாளர்களே தற்போது உள்ளனர். இதனால் பழுது ஏற்படும் நேரங்களில் விரைந்து அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மின்சார வாரியத்திற்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top