Close
மார்ச் 7, 2026 6:03 மணி

கொல்லிமலையில் தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்

தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெற, கொல்லிமலையில் உள்ள கால்நடை வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 100 சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, 100 பயனாளிகளின் 100 சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு பயனாளியின் ஒரு பசுவிற்கு ஒரு கிலோ ரூ. 35 மதிப்புள்ள சமச்சீர் தீவனம், தினமும் 3 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோவும், ரூ.100 மதிப்புள்ள தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத்தீவனம் ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ வழங்கப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகள், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து, உள்ளூரிலுள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தொடர்ந்து பால் வழங்கும், சினையுற்ற கறவைப்பசுக்களின் உரிமையாளர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர்.

மகளிர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் 30 சதவீத நபர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு, கொல்லிமலை ஒன்றிய கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top