மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே , 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பிரசித்தி பெற்ற யோகநரசிம்மர் கோவிலுக்கு அருகே குவாரியில் 20க்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள் காணப்படுகிறது.
இதில், மழைநீரால் குவாரி பள்ளங்களில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், ஆபத்தை உணராமல் சிலர் அப்பகுதியில் உள்ளவர்கள் அஜாக்ரதையாக நீச்சல் அடித்து குளித்து, துணிகளை துவைத்து செல்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் சிலர் விடுமுறை தினத்தன்று குவாரி பள்ளங்களின் ஆபத்தை அறிந்தும் பயமின்றி மீன் பிடிக்க செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு வெளியூரில் இருந்து வருபவர்கள், குவாரி தண்ணீரில் ஆழம் அறியாமல் குளிக்க செல்கின்றனர். கடந்த ஆண்டு இந்த குவாரியில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கை இருவரும் குளிக்க சென்ற போது உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், சாலையின் இருபுறமும் 300 அடி ஆழமான பள்ளங்கள் காணப்படுவதால் பயத்தில் சாலையை கடந்து செல்வதாக பொது மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆழமான பகுதி என விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் பலனில்லை.
எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க, நடுவில் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள், தடுப்பு சுவர்கள் அமைத்திடவும், கல்குவாரி பள்ளங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்திடவும், அல்லது நிரந்தரமாக மூடிட வேண்டும். என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




