நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 422 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவற்றை பரிசீலித்த ஆட்சியர், உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், சிப்காட் டிஆர்ஓ சரவணன், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




