Close
மார்ச் 7, 2026 4:17 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 267 வாக்குச்சாவடிகள் மாற்றி அமைப்பு: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்தல் ஓட்டுச்சாவடிகள் மாற்றியமைப்பு குறித்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்கு சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் துர்கா மூர்த்தி ப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 1,629 வாக்கு சாவடிகள் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த நிலையிலுள்ள வாக்கு சாவடிகளை மாற்றுதல், வாக்கு சாவடிகளின் அமைவிட மாற்றம், தரம் உயர்த்தப்பட்ட வாக்கு சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் வாக்கு சாவடிகளை ஒன்றிணைத்தல் ஆகியவை தொடர்பாக சம்மந்தப்பட்ட தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களால் அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதால் பிரிக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகள், மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டிய வாக்கு சாவடிகள், 2 கி.மீ. க்கு மேல் தொலைவு உள்ள வாக்கு சாவடிகள் என 207 வாக்கு சாவடிகளும், 2 ஒன்றிணைத்தல் வாக்கு சாவடிகளும், 6 தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர் மாற்றம் செய்ய வேண்டிய வாக்கு சாவடிகளும், 52 அமைவிடம் மாற்றம் வாக்கு சாவடிகளும் உள்ளது என சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் இறுதி செய்து பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த 267 வாக்கு சாவடிகள் பிரித்தல் மற்றும் மாற்றம் குறித்து, முன்மொழிவுகள் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  தெரிவித்தார்.

கூட்டத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் அங்கித் குமார் ஜெயின் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top