நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களைப் பிடிக்க வரும், மாநகராட்சி பணியாளர்களை தடுத்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட் சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள். குழந்தைகள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.
நாய் தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்தாலும், பெருகி வரும் நாய்களின் தொல்லையால், மாநகரில் மக்கள் பல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், நாய்களின் இனப் பெருக்கத்தை குறைக்கும் வகையில் தெருநாய்களை பிடித்து, இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும், மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 1,060 நாய்களை, மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநகராட்சி பணியாளர்கள் பல இடங்களில் தெரு நாய்களை பிடிக்க செல்லும் போது, அப்பகுதி மக்கள், நாய்களுக்கு உரிமை கொண்டாடி, அதனை பிடிக்க முடியாதபடி தடை செய்கின்றனர்.
மாநகராட்சி எல்லைக்குள் வீட்டிற்குள் நாய்கள் வளர்ப்பவர்கள் அனைவரும், மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். இதற்கான உரிய விண்ணப்பத்தில் விபரங்களை தெரிவித்து, நாய்க்கு சமீபத்தில் வெறிநோய் தடுப்பூசி போட்டதற்கான மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும்.
மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெறாவிட்டால், நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்சுப்படும்.
நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள், நாய்களை தங்களுடன் அழைத்து செல்லும்போது. நாய்களின் வாயை மாஸ்க் மூலம் மூடியபடி, கழுத்து பட்டையில் சங்கிலி போட்டு பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல வேண்டும்.
ஆக்ரோஷமான நாய்களை வீடுகளில் வளர்க்கக்கூடாது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடிக்க வரும்போது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.




