திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் கடைகோடி மக்களும் அன்றாடம் அணுகும் அரசு துறைகள் சேவைகள் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு மாநில முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது,
போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை போளூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர் மகேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் காசி, கிருஷ்ணமூர்த்தி, அவைத்தலைவர் பரசுராமன், ஒன்றிய துணை செயலாளர்கள் குமார், அமுதா மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கோபி, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
முகாமிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இது நாள் வரை 198 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான சான்றுகளும், வாரிசு சான்று ,ஜாதி சான்று, இருப்பிட சான்று, மின் இணைப்புக்கான ஆணைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுக்கான அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




