Close
மார்ச் 7, 2026 2:51 மணி

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 6ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை உலக அளவில் சாதனை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

விளையாட்டு என்பது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சமத்துவத்தையும் பகுத்தறிவும் வளர்க்க செய்யும், விளையாடினால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது மட்டுமின்றி விளையாடும் பொழுது அனைவரும் சமம் என்ற பகுத்தறிவு மேம்படும்.

ஒரு காலத்தில் தொட்டால் தீட்டு என்று சொன்ன காலம். நாங்கள் படிக்கிற காலங்களில் தொட்டுத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னது கபடி விளையாட்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அதிகம் உள்ளார்கள், ஆகவே எங்கள் மாவட்டத்திற்கு ஒரு உள் விளையாட்டு அரங்கம் தேவை என்று நான் கேட்ட உடனே கருணாநிதி 2006-2011 ஆட்சியில் நாம் அமர்ந்திருக்கக்கூடிய இந்த உள் விளையாட்டு அரங்கை நமக்கு வழங்கினார்.

தமிழ்நாட்டில் கல்வித்துறையோடு இணைந்திருந்த விளையாட்டு 1962-ல் பிரிக்கப்பட்டு தனித்துறையாக உருவாக்கப்பட்டது . தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக அளவில் 156 நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் தலைநகர் சென்னையில் சிறப்பாக நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க விளையாட்டு வீராங்கனைகளுக்கு பல்வேறு நிதி உதவிகள், ஸ்பான்சர்ஷிப்பையும் தமிழக அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் விளையாட்டு வீரர் என ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கென அரசு பணியில் காவல்துறை, வங்கி, பொதுப்பணித்துறை என அரசுத்துறைகளில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை 2025-26 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 96 ஆயிரத்து 530 பள்ளி மாணவ மாணவிகளும் 11 ஆயிரத்து 732 கல்லூரி மாணவ மாணவிகளும், 1362 மாற்றுத்திறனாளிகளும், 4 ஆயிரத்து 634 அரசு ஊழியர்களும், 15 ஆயிரத்து 991 பொது பிரிவினர் என 1 லட்சத்து 31 ஆயிரம் நபர்கள் விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்யப்பட்டு 32 ஆயிரத்து 620 நபர்கள் பல்வேறு வளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 2 ஆயிரத்து 118 வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர், அவர்களுக்கு பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 2 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் ஆயிரம் என பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி அம்ருத்தா எஸ்.குமார், முதன்மைகல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா, மாநகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி , தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஶ்ரீதரன், மாநகராட்சி செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைச்செயலாளர் ப்ரியா விஜயரங்கன், அரசு ஒப்பந்தததாரர் அருணை துரை வெங்கட், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top