Close
மார்ச் 7, 2026 4:22 மணி

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் தலைமறைவு: தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

விஜய் பிரச்சாரத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தலைமறைவான தவெக நாமக்கல் மாவட்ட செயலாளரை தனிப்படை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல்லில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் வாகனத்தை சுற்றி 5 எண்ணிக்கைக்கு அதிகமாக வாகனங்கள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. எனினும், போலீசாரின் நிபந்தனைகள் எதுவும் அன்று பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது.

தவிர, மதியம் 2.30 மணியளவில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்றார். காலதாமதமாக விஜய் பங்கேற்ற காரணத்தினால் அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்களால் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் பொதுச்சொத்துகளுக்கும் சேதம் விளைவித்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. சாந்தகுமார் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல் தந்தது, அச்சுறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாமக்கல் காவல்துறையில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்பி தலைமறைவாகிய சதீஷ்குமாரை பிடிக்க, நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top