திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் அவா்களின் இல்லங்களுக்கே சென்று அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கு வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
எனவே, தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசிய பொருள்களைப் பெற்று பயனடைய வேண்டுமென தெரிவித்துள்ளாா்.




