நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை ரூ. 5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், கடந்த 1975ம் ஆண்டு முதல் கோழிப்பண்ணைகள் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் விவசாயத்தின் உப தொழிலாக துவக்கப்பட்ட கோழிப்பண்ணை தற்போது பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டபத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக இருந்தது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 5.90 ஆக இருந்தது. நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.95 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 50 ஆண்டு கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டையின் விலை ரூ. 5.95க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 112 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.




