Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற, கூட்டுறவு வார விழா தொடக்க விழாவில், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம் என வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கூறினார்.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து, வாரவிழாவை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, 14ம் தேதி தொடங்கி, வரும், 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு இயக்கம், இங்கிலாந்து நாட்டில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும், இன்று உலகம் முழுவதும் பரவி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, பொருளாதார முன்னேற்றத்திற்காக அடித்தளம் அமைத்து வருகிறது. கூட்டுறவு இயக்கம் அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்த ஆண்டு விவசாயம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் பிற கடன்கள் உள்பட ரூ. 3,739 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீத இலக்கை அடைந்துள்ளோம்.

பயிர் கடன் மட்டும், ரூ. 650 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முடிவிற்குள், முழு இலக்கை எய்தி விடுவோம். கூட்டுறவு வார விழாவில், பொதுமக்களுக்கு கூட்டுறவு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை, சமையல் மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் தான், விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் உடனடியாக நிலுவையின்றி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர மேயர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப் பதிவாளர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் சந்தானம், வங்கி இயக்குனர்கள் நவலடி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top