நாமக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை, நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக வந்து, நாமக்கல் சட்டசபை தேர்தல் அதிகாரி, ஆர்டிஓ சாந்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு திமுக சார்பில் முதல் முறையாக பெண் வேட்பாளராக போட்டியிட கட்சி எனக்கு அனுமதி வழங்கியுள்ளது. நான் ஏற்கனவே இப்பகுதியில் நகராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்துள்ளேன்.
எனவே எனக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். நான் வெற்றிபெற்றால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றுவேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. அதனால் ஒட்டு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் திமுகவுக்குதான் ஓட்டளிப்பார்கள் என்பது, தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பெண்கள் திமுகவுக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாமக்கல் சட்டசபை தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக பதவியேற்பேன் என அவர் கூறினார்.




