நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு டிஆர்ஓ சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 538 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 6 பேருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ. 6 லட்சம் மதிப்பில், டாக்சி மற்றும் ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 11 பேருக்கு ரூ. 63,801 மதிப்பில் காதொலி கருவி, மோட்டார் பொருத்திய தையல் மெசின்கள் என, 17 பேருக்கு, ரூ. 6.64 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




